உள்ளூர் செய்திகள்
சாலை மற்றும் தகர குப்பத்தில் பாலம் சேதமடைந்துள்ள காட்சி.

மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வசதியாக தரைப்பாலம் அமைக்க வேண்டும்

Published On 2022-01-22 09:27 GMT   |   Update On 2022-01-22 09:27 GMT
சோளிங்கர் அடுத்த தகரகுப்பம் பகுதியில் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வசதியாக தரைப்பாலம் அமைத்து தர வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சோளிங்கர்:

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த தகரகுப்பம் ஊராட்சியில் 10 கிராமங்கள் உள்ளது. 

தகரகுப்பம் உட்பட 9 கிராமங்களில் உள்ள பள்ளி மாணவர்கள் லாலாபேட்டை, ரெண்டாடி, கொடைக்கல் மற்றும் லாலாப்போட்டைக்கு சென்றும், கல்லூரி மாணவர்கள் சோளிங்கர், வாலாஜா, ஆற்காடு, ராணிப்பேட்டையில் படித்து வருகின்றனர்.

லால்பேட்டையில் உள்ள சிப்காட் தொழிற் சாலையில் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் இருந்து அதிக அளவில் வேலை செய்து வருகின்றனர்.

இவர்களின் பிரதான சாலையாக ஏரி பகுதியில் இருந்து தகரகுப்பம் பஸ் நிறுத்தத்திற்கு செல்ல வேண்டும். 

அருகே உள்ள மலைப் பகுதியிலிருந்து ஓடை கால்வாய் உள்ளது. ஏரிக்கு செல்லும் வழியில் 3 இடங்களில் ஓடையில் இறங்கி தான் பள்ளிக்கும், விவசாயத்திற்கும், வேலைக்கும், விவசாய பொருட்கள் கொண்டு செல்கின்றனர். 

மழைக்காலங்களில் ஓடையில் அதிக அளவு வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால் இப்பகுதியில் இருந்து தகர குப்பம் பஸ் நிறுத்தம் அருகே செல்ல முடியாமல் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படு கின்றனர்.இதனால் அவர்களின் அன்றாட பணிகள் செய்ய முடியாமல் சிரமப்படுகின்றனர். 

இதனால் ஓடை கால்வாய் புதிய பாலம் மற்றும் சிறு பாலம் அமைக்க வேண்டும். மேலும் ஓடையில் உள்ள பழைய பாலத்தை அகற்றி புதிய பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Tags:    

Similar News