உள்ளூர் செய்திகள்
அரசு பேருந்துகள்

பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கியதால் போக்குவரத்து துறைக்கு ரூ.138 கோடி வருவாய்

Published On 2022-01-22 06:59 GMT   |   Update On 2022-01-22 07:05 GMT
பொங்கல் திருநாளை முன்னிட்டு தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்லுகின்ற பொதுமக்களின் நலனை பாதுகாக்கின்ற வகையில், அரசு செயல்படுத்தியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பேருந்துகள் இயக்கப்பட்டன.
சென்னை:

போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொதுமக்கள் சிரமமின்றி தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்திடவும், பண்டிகை முடிந்து சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு திரும்பிடும் வகையில் சிறப்புப் பேருந்துகளை இயக்கிட முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்லுகின்ற பொதுமக்களின் நலனை பாதுகாக்கின்ற வகையில், அரசு செயல்படுத்தியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பேருந்துகள் இயக்கப்பட்டன. இது பொதுமக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கடந்த 11,12 மற்றும் 13-ந்தேதிகளில் தமிழகம் முழுவதும் ஒட்டு மொத்தமாக சராசரியாக நாள் ஒன்றுக்கு 18,232 தினசரி பேருந்துகளுடன், 1,514 சிறப்புப் பேருந்துகள், 2 கோடியே 57 லட்சம் கிலோ மீட்டர் தூரத்திற்கு இயக்கப்பட்டு, 3 கோடியே 22 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதன் வாயிலாக 65 கோடியே 58 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டை விட அதாவது, சராசரியாக நாள் ஒன்றுக்கு கூடுதலாக 1,231 தினசரி பேருந்துகளும், 201 சிறப்புப் பேருந்துகளும், 28 லட்சம் கிலோமீட்டர் தூரத்திற்கு இயக்கப்பட்டு, 96 லட்சம் பயணிகள் அதிகமாக பயணம் செய்ததன் மூலம், 3 கோடியே 50 லட்சம் ரூபாய் வருவாய் கூடுதலாக கிடைத்துள்ளது.

பொங்கலுக்கு பின்பு, கடந்த 15, 17, 18 மற்றும் 19-ந்தேதிகளில் தமிழகம் முழுவதும் ஒட்டு மொத்தமாக சராசரியாக நாள் ஒன்றுக்கு 17,164 தினசரி பேருந்துகள், 2 கோடியே 94 லட்சம் கிலோ மீட்டர் தூரத்திற்கு இயக்கப்பட்டு, 3 கோடியே 80 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதன் வாயிலாக 72 கோடியே 49 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.



கடந்த 2021ம் ஆண்டை விட அதாவது, சராசரியாக நாள் ஒன்றுக்கு கூடுதலாக 1,271 தினசரி பேருந்துகள், 13 லட்சம் கிலோமீட்டர் தூரத்திற்கு இயக்கப்பட்டு, ஒரு கோடியே 7 லட்சம் பயணிகள் கூடுதலாக பயணம் செய்துள்ளனர்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு, ஒட்டு மொத்தமாக சுமார் 7 கோடி பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் செய்துள்ளனர். இதன் வாயிலாக சுமார் 138 கோடியே 7 இலட்சம் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News