உள்ளூர் செய்திகள்
நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் வலியுறுத்தல்
நெமிலியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம், ரெட்டிவலம், துறையூர், சிறுவளையம், பெருவளையம், வேட்டாங்குளம் உள்ளிட்ட கிராமங்களில் உடனடியாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும் என்று இந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 5 மாதங்களுக்கு முன்பு நேரடி கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டதால் விவசாயிகள் தங்கள் நிலங்களில் அறுவடை செய்த நெல்லை வெயிலில் உலர்த்தி மூட்டை கட்டி தங்களது வீட்டில் வைத்துள்ளனர். இந்த நெல்லை தனியாரிடம் விற்பதற்கு சென்றால் அவர்கள் அடி மாட்டு விலைக்கு கேட்பதால் விவசாயிகள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.
மேலும் உரங்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளதால் சில விவசாயிகள் பயிர் செய்ய முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.
இந்நிலையில் உடனடியாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறந்து விவசாயிகளிடம் உள்ள நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய ஆவணம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தின் மாநில இளைஞரணி தலைவர் சுபாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.