உள்ளூர் செய்திகள்
புரவலர் நிதி வழங்கிய அரசு பள்ளி ஆசிரியர்கள்
இல்லம் தேடி கல்வி தொடக்க விழாவில் அரசு பள்ளி ஆசிரியர்கள் புரவலர் நிதி வழங்கினர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் கொத்தமங்கலப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இல்லம் தேடி கல்வி திட்ட மைய தொடக்க விழா பள்ளி தலைமை ஆசிரியர் சரோஜா தலைமையில் நடைபெற்றது.
விழாவில் இல்லம் தேடி கல்வி திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனியசாமி, ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் செந்தில், ஆனந்தராஜன் ஆகியோர் கலந்து கொண்டு இல்லம் தேடி கல்வி திட்டத்தின் நோக்கம் குறித்து பேசினர்.
விழாவில் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் பிச்சை, பள்ளி மேலாண்மைக் குழுத்தலைவர் அருட்செல்வம், பட்டதாரி ஆசிரியர்கள் செல்வராசு, ஜெயலட்சுமி, இடைநிலை ஆசிரியர்கள் விஜயகுமாரி, கனகலெட்சுமி, சேகர், கற்பகமணி ஆகியோர் தன்னார்வலர் பெனசீர் பேகத்தை பாராட்டிப் பேசினர்.
முன்னதாக பள்ளித்தலை மையாசிரியர் சரோஜா முன்னிலையில் அப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரும் பள்ளி மேலாண்மைக் குழுத்தலைவர் அருட்செல்வத்திடம் புரவலர் நிதியை வழங்கினர். புரவலர் நிதி வழங்கிய கொத்தமங்கலப்பட்டி ஆசிரியர்களை அப்பகுதி மக்கள் வெகுவாகப் பாராட்டினர்.
இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியை சரோஜா கூறியதாவது:&
பள்ளியின் முன்னாள் மாணவர்கள், கிராம பொதுமக்கள், சமூக ஆர்வலர் என அனைவரும் குறைந்த பட்சம் ஆயிரம் முதல் விருப்பம் போல் நிதியை பள்ளிக்கு வழங்குவது புரவலர் திட்டம் ஆகும். இத்திட்டத்தில் வரும் தொகைகள் அனைத்தும் வங்கிகளில் வைப்புத்தொகையாக வைக்கப்படும்.
அதிலிருந்து கிடைக்கும் வட்டித்தொகை பள்ளியின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும். எனவே இப்பகுதி மக்களிடம் புரவலர் திட்டம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே பள்ளி ஆசிரியர்களாகிய நாங்கள் எங்களை புரவலர் திட்டத்தில் இணைத்துக் கொண்டுள்ளோம். எங்களது இந்த செயலால் இனி இப்பள்ளியில் புரவலர் திட்ட நிதி பெருகும் என்றார்.