உள்ளூர் செய்திகள்
திருக்கோவிலூர் அருகே வாலிபருக்கு கொலை மிரட்டல்
திருக்கோவிலூர் அருகே வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக அரகண்டநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்கோவிலூர்:
திருக்கோவிலூர் அடுத்த பில்ராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 30). சம்பவத்தன்று இவர் பில்ராம்பட்டு மெயின்ரோட்டில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே உள்ள நாடக மேடை எதிரில் தனது மோட்டார் சைக்கிளை வைத்துக்கொண்டு நின்று கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த சதாசிவம் மற்றும் கார்த்தி ஆகிய 2 பேரும் ராமகிருஷ்ணனிடம் தகராறு செய்ததுடன் அவரின் மோட்டார் சைக்கிளையும் அடித்து உடைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது குறித்து ராமகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் அரகண்டநல்லூர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தியதுடன் சதாசிவம் மற்றும் கார்த்தி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து சதாசிவத்தை கைது செய்தனர். கார்த்தியை வலைவீசி தேடி வருகின்றனர்.