உள்ளூர் செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூரில் தொழிலாளர்கள் முகக்கவசம் அணியாமல் பணியாற்றியதால் 2 தனியார் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்ட கலெக்டரின் உத்திரவின்படி, ஸ்ரீவில்லிபுத்துர் நகராட்சி ஆணையாளர் மல்லிகா அறிவுறுத்தலின்படி, நகர்நல அலுவலர் கவிப்ரியா ஆலோசனை பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் கொரோனா ஒழிப்பு பணியில் சுகாதாரத் துறை அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பொதுமக்கள் மத்தியில் முகக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அரசு விதிமுறைகளின்படி ரூ.500 அபராதம் விதித்து வருகின்றனர்.
எனினும் மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததால் முகக்கவசம் அணிய தேவையில்லை என்ற மனநிலையில் மக்கள் வெளியே நடமாடி வருகின்றனர். அவர்களை கண்டுபிடித்து நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் அபராதம் விதித்து வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகர பகுதியில் ரெயில்நிலையம் செல்லும் வழியில் உள்ள தனியார் நூற்பாலையில் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் சுரேஷ், சந்திரா, ஜஹாங்கீர் ஆகியோர் திடீரென ஆய்வு செய்தனர்.
அப்போது அங்கு பணியாற்றிய ஊழியர்கள் அனைவரும் முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பணியாற்றினர். இதனால் அந்த நிறுவனத்துக்கு ரூ.10ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் அருகிலுள்ள பாலிதீன் தயாரிக்கும் கம்பெனிக்கு சென்று ஆய்வு செய்த போது ஊழியர்களில் பெரும்பாலானோர் முகக்கவசம் அணியாமல் பணிபுரிந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அந்த நிறுவனத்துக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அந்த 2 நிறுவனங்களின் மேலாளரையும் அழைத்து இனிவரும் காலங்களில் ஊழியர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து வருவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று அவர்களுக்கு கொரானா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.