உள்ளூர் செய்திகள்
பொங்கல் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
நாட்டார்மங்கலம் கிராமத்தில் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடத்தி வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பெரம்பலூர்:
தமிழர் திருநாளாம் தை பொங்கல் பண்டிகை நகரங்களைவிட கிராமங்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக பாரம்பரியத்தை கட்டிக்காக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நாட்டார்மங்கலம் கிராமத்தில் பொங்கல் விழாவையொட்டி ஓட்டப்பந்தயம், இசை நாற்காலி, தண்ணீர் நிரப்புதல், சைக்கிள் ரேஸ், கபடி, கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
இந்த போட்டிகளில் சிறுவர், சிறுமிகள், பெண்கள், இளைஞர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் போட்டிகள் நடைபெற்றது. விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை நாட்டார்மங்கலம் கிராம இளைஞர்கள் மற்றும் கிராம பொதுமக்கள், முக்கியஸ்தர்கள், நிர்வாகிகள் சிறப்பாக செய்து இருந்தனர்.