உள்ளூர் செய்திகள் (District)
இளம் பெண்ணை கத்தியால் குத்திய காதலன் கைது
ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸ் நிலையத்தில் இளம் பெண்ணை கத்தியால் குத்திய காதலன் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர் சூடிக்கொடுத்த விநாயகர் தெருவைச் சேர்ந்தவர் பிரபாதேவி (வயது 24). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரியில் படிக்கும்போது பிரபாதேவிக்கும், பாட்டக்குளத்தை சேர்ந்த பிரகாஷ் (25) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது.
இந்த நிலையில் பிரபாதேவி வேலைக்கு செல்வது பிரகாசுக்கு உடன்பாடு இல்லை. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பிரபாதேவி குடும்பத்தினர் அவரை மறந்து விடுமாறு கூறியுள்ளனர்.
சம்பவத்தன்று பிரகாஷ் காதலி வீட்டுக்கு சென்று தகராறு செய்துள்ளார். இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் இருவரையும் விசாரணைக்கு அழைத்தனர். அதன்படி பிரபாதேவி, பிரகாஷ் போலீஸ் நிலையத்திற்கு சென்றனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பிரகாஷ், காதலியை கத்தியால் சரமாரியாக குத்தினார்.
படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாசை கைது செய்தனர்.