உள்ளூர் செய்திகள்
பாகலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியதில் வாலிபர் சாவு-நண்பர் படுகாயம்
ஓசூரை அடுத்த பாகலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார். உடன் சென்ற நண்பர் படுகாயமடைந்தார்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் அருகே சூடாபுரத்தை சேர்ந்தவர் பாலாஜி(வயது19) மற்றும் அதே பகுதியை சேர்ந்த பரத் (20) ஆகிய இருவரும் டெம்போ டிரைவர்கள் ஆவர்.
இவர்கள் இருவரும் நேற்று மோட்டார் சைக்கிளில் பாகலூரில் இருந்து சூளகிரி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, ஓசூரில் இருந்து கொளதாசபுரம் நோக்கி வேகமாக வந்த வேன் ஒன்று, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 2 பேரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.
இதில், மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த பாலாஜி, சம்பவ இடத்திலேயே இறந்தார், பின்னால் உட்கார்ந்து சென்ற பரத்துக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாகலூர் போலீசார் பாலாஜியின் உடலை மீட்டு ஒசூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
காயமடைந்த பரத்தை அதே மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.