உள்ளூர் செய்திகள்
.

வாலிபரை மிளகாய் பொடி தூவி அரிவாளால் வெட்டிய கும்பல்

Published On 2022-01-18 09:24 GMT   |   Update On 2022-01-18 09:24 GMT
காதல் திருமணத்துக்கு உதவிய வாலிபரை மிளகாய் பொடி தூவி அரிவாளால் வெட்டிய கும்பலை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேலம்:

சேலம் அம்மாபேட்டை அருகே உள்ள குமரகிரி பஞ்ச காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகராஜ் மகன் கார்த்திக் (வயது 30). இவரது நண்பர் மணிகண்டன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த சந்துரு என்பவரின் உறவினர் பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார்.

இதனால் கடும் கோபத்தில் இருந்த சந்துரு நண்பர்களுடன் சேர்ந்து மணிகண்டன் மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்கினார். இதை அறிந்த கார்த்திக் மணிகண்டனை அழைத்து சென்று அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று குமரகிரி சுடுகாடு பகுதி அருகே நடந்து வந்து கொண்டிருந்த கார்த்திக்கை  சந்துரு, பிரகாஷ், பாலச்சந்திரன் (வயது 40), ஸ்ரீதர் (35), ஆகியோர் வழிமறித்தனர்.
 
பின்பு கார்த்திக்கின் மீது மிளகாய் பொடி தூவி அரிவாளால் வெட்டி இரும்பு பைப்பால் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த கார்த்திக்கை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் கார்த்திக் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலச்சந்திரன் மற்றும் ஸ்ரீதரை கைது செய்தனர். 

தப்பி ஓடிய சந்துரு மற்றும் பிரகாஷ் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News