ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கரும்பு ஆலை தொழிலாளி மர்மமரணம்
ஸ்ரீவில்லிபுத்தூர்:
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தை சேர்ந்தவர் பவுன்ராஜ். இவரது கரும்பு ஆலையில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கல்லாபுரம் பகுதியை சேர்ந்த ராஜா (வயது 36) வேலை பார்த்து வந்தார். இதற்காக அவரது குடும்பத்தினரும் அங்கேயே தங்கி உள்ளனர்.
கடந்த 14-ந்தேதி ராஜா, மனைவியிடம் பணம் பெற்றுக் கொண்டு வெளியில் சென்று வருவதாக கூறி சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.
பல்வேறு இடங்களில் தேடியும் ராஜா கிடைக்கவில்லை. இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள மொட்டை பத்தான் கண்மாயில் 25 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் கிடப்பதாக கிராம அலுவலருக்கு தகவல் வந்தது.
அதன்பேரில் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் அவர் மாயமான ராஜா என தெரியவந்தது.
இதுகுறித்து அவரது மனைவி ராஜேஸ்வரி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜா எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.