உள்ளூர் செய்திகள்
3 மாதங்களாக பிணவறையில் இருந்து வரும் 12 உடல்கள் - துர்நாற்றம் வீசுவதால் நோயாளிகள் தவிப்பு
தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 3 மாதங்களாக பிணவறையில் இந்த உடல்கள் இருந்து வருவதால் துர்நாற்றம் வீசி வருகிறது.
தருமபுரி:
தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 3 மாதங்களாக 12 உடல்கள் இருந்து வருகின்றது. மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடந்த விபத்தில் பலியானவர்கள், விபத்தில் இறந்த அடையாளம் தெரியாதவர்கள், தற்கொலை செய்தவர்கள் என 12 பேரின் உடல்கள் வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இருப்பினும் கடந்த 3 மாதங்களாக பிணவறையில் இந்த உடல்கள் இருந்து வருவதால் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
எனவே இதுகுறித்து போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து பிணவறையில் உள்ள உடல்களை அடக்கம் செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.