உள்ளூர் செய்திகள்
மனு அளித்த இந்து முன்னணியினர்.

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இந்து முன்னணியினர் மனு

Published On 2022-01-17 09:58 GMT   |   Update On 2022-01-17 09:58 GMT
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இந்து முன்னணி நிர்வாகிகள் திரண்டு வந்து நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழாவையொட்டி தீர்த்தவாரிக்கு அனுமதி கேட்டு மனு அளித்தனர்.
நெல்லை:

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவில்லை. இதனால் பொதுமக்கள் நுழைவு வாயிலில் உள்ள மனுப்பெட்டியில் மனுக்களை போட்டு சென்றனர்.

இந்து முன்னணி நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் ராஜ செல்வம் தலைமையில் நிர்வாகிகள் திரண்டு வந்து அலுவலகத்தில் உள்ள மனுப்பெட்டியில் மனு ஒன்றை போட்டனர்.

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
டவுன் நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவிலில் தைப்பூச திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. தைப்பூசத்தை ஒட்டி தீர்த்தவாரி முடிந்த 2-வது நாளில் கோவில் வெளித்தெப்பத்தில் தெப்ப உற்சவம் நடைபெறும்.

அதேபோல் தைப்பூச தினத்தன்று தாமிரபரணி ஆற்றங்கரையில் அதற்கென உருவாக்கப்பட்ட தைப்பூச மண்டபத்தில் தீர்த்தவாரி நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் குறைந்தளவு பக்தர்கள் பங்கேற்பார்கள்.

ஆனால் கொரோனாவை காரணம்காட்டி நாளை நடைபெற உள்ள தீர்த்தவாரி நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் சுவாமி வீதிஉலா வரக்கூடாது என்றும், திருவிழாக்கள் நடத்த கூடாது என்றும் அரசு உத்தரவிட்டுள்ளதாக கோவில் செயல் அலுவலர் தெரிவிக்கிறார்.

எனவே நாளை தைப்பூச தீர்த்தவாரி திருவிழா மற்றும் வருகிற 20-ந்தேதி தைப்பூச திருவிழா உள்ளிட்டவற்றை நடத்த மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.
Tags:    

Similar News