உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

ஈரோட்டில் 10 நாளில் 2955 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2022-01-17 09:43 GMT   |   Update On 2022-01-17 09:43 GMT
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு தடுப்புநடவடிக்கை காரணமாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனாபாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு தடுப்புநடவடிக்கை காரணமாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனாபாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது.

இதன் எதிரொலியாக ஈரோடு மாவட்டத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் கடந்த 7-ந் தேதி முதல் தினசரி பாதிப்பு 100-ஐ கடந்து ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

கடந்த 7-ந் தேதி 103, 8-ந் 131, 9-ந் தேதி 149, 10-ந் தேதி 123, 11-ந் தேதி 242, 12-ந் தேதி 330, 13-ந் தேதி 410, 14-ந் தேதி 355, 15-ந் தேதி 542 என கொரோனா பாதிப்பு பதிவாகியிருந்தது.

இந்நிலையில் சுகாதாரத்துறையினர் வெளியிட்ட பட்டியல்படி நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக புதியஉச்சமாக 570 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது கடந்த 10 நாட்களாக மாவட்டத்தில் 2 ஆயிரத்து 955 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 10 ஆயிரத்து 899 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 151 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இதனால் இதுவரை மாவட்டத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 7 ஆயிரத்து 796 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் 714 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் 2,389 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து தினசரி பாதிப்பு இருந்து வருவதால் சிகிச்சை பெறுவோரின் எண்ணி க்கையும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் மொத்த பாதிப்பில் மாநகர் பகுதியில் தான் 50 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இன்னமும் பொதுமக்கள் வெளியே வரும்போது முககவசம் அணியாமல் வருகின்றனர். 

ஒரு சிலர் முககவசம் அணிந்து வந்தாலும் அவற்றை முறையாக அணியாமல் வாய், மூக்கு தெரியும்படி கழுத்தில் தொங்க விட்டு வருகின்றனர். 

அதிகாரிகள் பார்த்தால் மட்டும் முககவசத்தை முறையாக அணிகின்றனர். இதேப்போல் பொதுஇடங்களில் சமூக இடைவெளியும் கேள்விக்குறியாகியுள்ளது. 

பொங்கல் பண்டிகையையொட்டி கடைவீதிகளில் மக்கள்கூட்டம் கூட்டமாக சென்றதை காண முடிந்தது.  இதுபோன்ற அலட்சியதால் மாவட்டத்தில் கொரோனாபாதிப்பு மேலும் உயரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
Tags:    

Similar News