உள்ளூர் செய்திகள்
திருமுருகன்பூண்டி நகராட்சி பகுதிகளில் 4 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வழங்க ஏற்பாடு - நகராட்சி கமிஷனர் தகவல்
120 தொழிற்சாலைகள் உட்பட, 13 ஆயிரத்து 599 பேர் சொத்துவரி செலுத்துகின்றனர்.
திருப்பூர்:
திருமுருகன்பூண்டி நகராட்சியில், நான்கு நாள் இடைவெளியில், தண்ணீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருமுருகன்பூண்டி பேரூராட்சி, இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது.
குறிப்பாக தடையில்லா குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவர்களிடம் உள்ளது. நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. தற்போதைய நிலையில் 9,211 குழாய் இணைப்புகள் உள்ளன.
120 தொழிற்சாலைகள் உட்பட, 13 ஆயிரத்து 599 பேர் சொத்துவரி செலுத்துகின்றனர். நகராட்சியில், 2,000-க்கும் மேற்பட்ட இணைப்புகள், அனுமதியின்றி, முறைகேடாக வழங்கப்பட்டுள்ளது என்ற புகாரை தொடர்ந்து, 500-க்கும் மேற்பட்ட அனுமதியில்லாத இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
நகராட்சி பகுதியில், 12 முதல், 15 நாட்களுக்கு ஒரு முறை, 2 முதல், 3 மணி நேரம் வரை மட்டுமே தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், நகராட்சி கமிஷனர் முகமது சம்சுதீன், திருமுருகன்பூண்டியில் உள்ள தரைமட்ட மற்றும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி களை ஆய்வு செய்து பல தரப்பினரின் கருத்துகளை கேட்டறிந்தார்.
நகராட்சிக்கு வரும் நீராதாரங்களின் அளவு வினியோக முறை உள்ளிட்டவற்றை ஆராய்ந்தார். அதன் தொடர்ச்சியாக நான்கு நாட்களுக்கு ஒரு முறை இரண்டு மணி நேரம் தண்ணீர் வினியோகம் செய்ய திட்டம் வகுக்கக்கப்பட்டுள்ளது.