உள்ளூர் செய்திகள்
பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் சென்ற நிதி நிறுவன அதிபர், ஆசிரியர் வீட்டில் கொள்ளை
பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் சென்ற நிதி நிறுவன அதிபர், ஆசிரியர் வீட்டில் கொள்ளை நடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்தியூர்:
பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் சென்ற நிதிநிறுவன அதிபர், ஆசிரியர் வீட்டில் கொள்ளை நடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்தியூர் பெரியார்நகரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (45) நிதிநிறுவன அதிபர். இவர் பொங்கல்பண்டிகை கொண்டாட குடும்பத்துடன் சொந்தஊரான கரூருக்குச் சென்றுவிட்டார்.
இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் சுகந்தி. இவர் நஞ்சமடைக்குட்டை அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரும் பொங்கல்பண்டிகையையொட்டி சொந்தஊரான திருநெல்வேலிக்குச் சென்று விட்டார்.
இந்நிலையில் 2 வீடும் பூட்டப்பட்டு இருப்பதை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் இரவு நேரத்தில் அங்கு வந்து உள்ளனர்.
முதலில் பாலகிருஷ்ணன் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த 2 பவுன் நகையை திருடிக் கொண்டனர். மேலும் வீட்டில் பணம் ஏதும் வைத்துள்ளார்களா? என்று வீடு முழுவதும் தேடி பார்த்தனர். ஆனால் பணம் எதும் சிக்கவில்லை.
இதையடுத்து மர்ம நபர்கள் அருகில் உள்ள ஆசிரியர் சுகந்தி வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். அங்கு பணம், நகை எதுவும் இல்லாததால் மர்ம நபர்கள் திரும்பி சென்றனர்.
அடுத்தடுத்து 2 வீடுகளின் பூட்டுகளும் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து தெரியவந்ததும் அந்தியூர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் கொள்ளை குறித்து விசாரணை நடத்த தனிப்படை அமைக்கப்பட்டது.