உள்ளூர் செய்திகள்
அந்தியூர் பகுதியில் 2-வது நாளாக கொட்டி தீர்த்த கனமழை
ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் 2-வது நாளாக திடீரென இரவு 11 மணியளவில் சாரல்மழை பெய்தது. பின்னர் அது பலத்த மழையாக கொட்டியது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் 2-வது நாளாக திடீரென இரவு 11 மணியளவில் சாரல்மழை பெய்தது. பின்னர் அது பலத்த மழையாக கொட்டியது.
அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வட்டக்காடு, புதுக்காடு, விளாங்குட்டை, கிழங்குகுழி, கும்பரவாணி, உப்புகொடிகால்தோட்டம் ஆகிய இடங்களிலும் கனமழை கொட்டியது. இரவு 11 மணிக்கு தொடங்கிய மழை தொடர்ந்து 2 மணி நேரம் இடைவிடாமல் கொட்டி தீர்த்தது.
இந்த பலத்த மழை காரணமாக காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு அந்தியூர் அருகே உள்ள வேம்பத்தி ஏரிக்கு செல்லும் ஓடையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
இதனால் தவுட்டுப்பாளையம் பகுதியில் உள்ள மேம்பாலத்தை தொடும் அளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள மின் கம்பங்கள் சாய்ந்து விழலாம் என்பதால் மின் ஊழியர்கள் அதிகாலை அந்த பகுதியில் மின்சாரத்தை துண்டித்தனர்.
இதனால் அந்தியூர், சத்தியமங்கலம் செல்லும் சாலையில் உள்ள பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.
அந்தியூர் தெப்பக்குளம் வீதி பள்ளமான பகுதியில் மீண்டும் வீடுகளுக்குள் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனையடுத்து வீட்டின் உரிமையாளர்கள் தங்களது வீட்டில் தேங்கிய மழைநீரை விடிய, விடிய அகற்றினர்.
மேலும் தவிட்டுபாளையம் பகுதியில் உள்ள மயானம் சுற்றுச்சுவர் இந்த காட்டாற்று வெள்ளத்தால் சேதம் அடைந்து உள்ளது. அந்தியூர் பகுதியில் இந்த திடீர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.