உள்ளூர் செய்திகள்
தாம்பரம் ரெயில் நிலையம்

தாம்பரத்தில் இருந்து செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் 50 ரூபாய் கட்டணம் உயருகிறது

Published On 2022-01-15 09:05 GMT   |   Update On 2022-01-15 09:15 GMT
தாம்பரம், காட்பாடி ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளதால் அங்கிருந்து செல்லும் பயணிகளுக்கு மேம்பாட்டு கட்டணம் உயருகிறது என்று தெற்கு ரெயில்வே அதிகாரி கூறினார்.
சென்னை:

ரெயில் நிலையங்களின் மேம்பாடு மற்றும் மறு சீரமைப்புக்கு ரெயில்வே துறையிடம் பல்வேறு திட்டங்கள் உள்ளன. அவை பல்வேறு கட்டங்களாக செய்யப்படுகின்றன.

இந்தநிலையில் தாம்பரம் மற்றும் காட்பாடி ரெயில் நிலையங்கள் மறு சீரமைப்பு செய்யப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன. இதற்காக இந்த 2 ரெயில் நிலையங்களில் இருந்து செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகளிடம் இருந்து மேம்பாட்டுக் கட்டணம் வசூலிக்க மத்திய ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. தாம்பரம் மற்றும் காட்பாடி ரெயில் நிலையங்களில் இருந்து எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்ய படுக்கை வசதி கொண்ட வகுப்புக்கு ரூ.25 கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. அதே நேரத்தில் ஏ.சி. வகுப்பில் பயணம் செய்ய ரூ.50 கட்டணம் உயருகிறது.

தற்போது சூப்பர் பாஸ்ட், ஏ.சி.எக்ஸ்பிரஸ், சிறப்பு ரெயில்கள் என பல்வேறு வகையாக ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வகைப்பாடுகளின் காரணமாக ரெயில் கட்டணங்களில் பல்வேறு ஏற்ற, இறக்கங்கள் காணப்படுகின்றன.

தற்போது மேம்படுத்தல் கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதால் பயணிகள் இன்னும் கூடுதல் கட்டணம் செலுத்தப்பட வேண்டிய நிலை உருவாகி உள்ளது.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், “ரெயில் நிலையங்கள் மறு சீரமைப்பு செய்யப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன. எந்தெந்த ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இப்போதைக்கு தாம்பரம், காட்பாடி ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. இதனால் அங்கிருந்து செல்லும் பயணிகளுக்கு மேம்பாட்டு கட்டணம் உயருகிறது” என்றார்.

இதுகுறித்து ரெயில் பயணி ஒருவர் கூறியதாவது:-

ரெயில் பயணிகளுக்கு மேம்பாட்டு கட்டணம் மறைமுக உயர்வாக செய்யப்படலாம். ரெயில் கட்டணம் உயர்த்தப்படும் முன்பு அந்த ரெயில் நிலையங்களில் மாற்றங்களை கொண்டு வந்து அதன் பிறகு கட்டணத்தை உயர்த்த வேண்டும்.

சென்ட்ரல், எழும்பூர், அம்பத்தூர், திருநின்றவூர், ஆவடி உள்ளிட்ட பல ரெயில் நிலையங்களை மேம்படுத்த கடந்த 20 ஆண்டுகளாக பரிந்துரைகள் உள்ளன. இவற்றில் சில பயணிகள் நடந்து வருகின்றன. ஆனால் இந்த ரெயில் நிலையங்களில் பயணிகளுக்கு போதிய வசதிகள் இல்லை.

ரெயில் நிலைய மேம்பாட்டு கட்டணத்தை வசூலிக்கலாம் என்ற விதியை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு ரெயில் நிலையங்களை மேம்படுத்துவதை ரெயில்வே அமைச்சகம் விரைவுபடுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News