உள்ளூர் செய்திகள்
பஸ் கண்ணாடி உடைப்பு

விழுப்புரம் அருகே அரசு பஸ் கண்ணாடி உடைப்பு

Published On 2022-01-13 13:04 GMT   |   Update On 2022-01-13 13:04 GMT
விழுப்புரம் அருகே அரசு பஸ் மீது கல் வீசிய நபரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
திருவெண்ணைநல்லூர்:

விழுப்புரம் பஸ் நிலையத்தில் இருந்து நேற்றிரவு பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் ஒன்று திருவெண்ணைநல்லூர் நோக்கி புறப்பட்டது. இந்த அரசு பஸ் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கள்ளுக்கடை மூலை பகுதியில் சென்று கொண்டிருந்தது.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மர்ம நபர் திடீரென பஸ்சின் முன்பக்க கண்ணாடி மீது கல்லை வீசினார். இதில் அரசு பஸ்சின் முன்பக்க கண்ணாடி முற்றிலும் நொறுங்கியது.

அதிர்ச்சி அடைந்த பயணிகள் பஸ்சில் இருந்து அலறியடித்துக் கொண்டு இறங்கினர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து அரசு பஸ்சின் டிரைவர் திருவெண்ணைநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த சப்-இன்ஸ்பெக்டர் குருபரன் தலைமையிலான போலீசார் அரசு பஸ் மீது கல் வீசிய நபரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த நபர் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள ஏமாப்பூர் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் (வயது 29) என்பதும் மேலும் அந்த நபர் குடி போதையில் இருப்பதும் தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் செல்வகுமார் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அரசு பஸ்சின் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News