தொழிலாளி வீட்டுக்குள் புகுந்து திருட முயன்ற கொள்ளையன்- பொதுமக்கள் தாக்கியதில் பலி
நாகப்பட்டினம்:
நாகை டாடா நகரை சேர்ந்தவர் காளிதாஸ் (வயது 35) கூலித்தொழிலாளி. நேற்று இரவு இவர் மற்றும் இவரது மனைவி மலர்கொடி (26), தாயார் கண்ணம்மாள் (56) ஆகியோர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர்.
அப்போது நள்ளிரவில் 28 வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவர் கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு அங்கு வந்தார். பின்னர் அவர் கதவை உடைத்து உள்ளே புகுந்தார். சத்தம் கேட்டு காளிதாஸ் எழுந்து பார்த்தபோது அந்த வாலிபர் தப்பி ஓட முயன்றார். சுதாரித்து கொண்ட காளிதாஸ் உடனே மனைவி மலர்கொடி, தாய் கண்ணம்மாளை எழுப்பினார். பின்னர் 3 பேரும் சேர்ந்து அந்த வாலிபரை பிடித்து தாக்க தொடங்கினர். சிறிது நேரத்தில் ஒன்று திரண்ட பொதுமக்களும் வாலிபரை தெருவுக்கு இழுத்து சென்று சரமாரியமாக தாக்கினர். இதில் அவர் ரத்த காயங்களுடன் மயங்கி விழுந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த நாகை நகர போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயமடைந்த கொள்ளையனை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து காளிதாஸ், மலர்கொடி, கண்ணம்மாள் மற்றும் பொதுமக்கள் சிலரை பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது