உள்ளூர் செய்திகள்
சங்கராபுரம் அருகே வாகனம் மோதி வாலிபர் பலி
சங்கராபுரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கராபுரம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் தேவபாண்டலம் கிராமத்தைச் சேர்ந்த தர்மலிங்கம் மகன் தமிழ்அழகன்(32). கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் நிதி மேலாளராக பணிபுரிந்து வந்த இவர் சம்பவத்தன்று பணம் வசூல் செய்வதற்காக பாவளம் கிராமத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
தியாகராஜபுரம் மணி நதி ஆற்றுப்பாலம் அருகே வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக சேலம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.