உள்ளூர் செய்திகள்
போராட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியினர்.

ஈரோட்டில் ரெயில் மறியலுக்கு முயன்ற இந்து மக்கள் கட்சியினர் கைது

Published On 2022-01-10 14:48 IST   |   Update On 2022-01-10 14:48:00 IST
பிரதமர் மோடி பாதுகாப்பு குளறுபடியை கண்டித்து ஈரோட்டில் இன்று ரெயில் மறியலுக்கு முயன்ற இந்து மக்கள் கட்சியினர் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
 ஈரோடு:

பிரதமர் மோடி பாதுகாப்பு குளறுபடியை கண்டித்து ஈரோட்டில் இன்று ரெயில்  மறியலுக்கு முயன்ற இந்து மக்கள் கட்சியினர் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

பிரதமர் மோடி பஞ்சாப் மாநிலத்திற்கு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைப்பதற்காக சென்றார். அப்போது அவரது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக  பஞ்சாப் காங்கிரஸ் அரசு செயல்பட்டதாக கூறப்படுகிறது.

இதை கண்டிக்கும் வகையில் பஞ்சாப் காங்கிரஸ் அரசு ராஜினாமா செய்யக்கோரி இன்று ஈரோட்டில் இந்து மக்கள் கட்சி சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இன்று காலை இந்து மக்கள் கட்சியின் மேற்கு மண்டல செயலாளர் முருகேசன் தலைமையில்   நிர்வாகிகள் பலர் ஈரோடு காளைமாடு சிலை அருகே ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் ரெயில் நிலையத்தை நோக்கி கோஷ மிட்டபடி சென்றனர். 

முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சூரம்பட்டி போலீசார் ரெயில் நிலையம்  பகுதியில் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ரெயில் நிலையம் உள்ளே நுழைய முயன்ற இந்து மக்கள் கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இதனால் இந்து மக்கள் கட்சியினர் சென்னிமலை ரோட்டில் அமர்ந்து போராட்டத்தில் ஈடு பட்டனர். அவர்கள் பஞ்சாப் முதல்-அமைச்சர்,  ராகுல் காந்தி புகைப்படத்தை கிழித்து எறிந்தனர்.

இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இதையடுத்து சூரம்பட்டி போலீசார் அவர்களை கைது செய்து வேனில் ஏற்றி  அழைத்து சென்றனர்.

Similar News