உள்ளூர் செய்திகள்
விருதுநகரில் கைது செய்யப்பட்ட ராஜேந்திரபாலாஜி ஆதரவாளர்கள்

போராட்டத்திற்கு திரண்ட முன்னாள் அமைச்சர் உள்பட 82 பேர் கைது

Published On 2022-01-06 05:37 GMT   |   Update On 2022-01-06 05:37 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு முன்பு திரண்ட முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் உள்பட 25 பேரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர்:

கர்நாடகாவில் ராஜேந்திரபாலாஜி கைது செய்யப்பட்டதை அறிந்த அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ராஜேந்திர பாலாஜியை விருதுநகருக்கு போலீசார் அழைத்துவரும் தகவல் அறிந்து விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகம் முன்பு முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன் தலைமையில் இரவில் திரண்டனர்.

அவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் எச்சரித்தனர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லவில்லை. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 57 பேரும் அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

இதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு முன்பு முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் உள்ளிட்ட 25 பேர் திரண்டனர். அவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் கூறினர். ஆனால் போலீசாருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து கோர்ட்டு முன்பு திரண்ட முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் உள்பட 25 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News