உள்ளூர் செய்திகள்
புதுக்கோட்டை: இடிந்து விழும் நிலையில் அரசு பள்ளி
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள அரசு பள்ளி கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று பெற்றோர்கள்கோரிக்கை வைத்துள்ளனர்.
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது ராங்கியன்விடுதி ஊராட்சி. இந்த ஊராட்சியில் சுமார் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
பல்வேறு கிராமங்கள் உள்ள இப்பகுதியில் பொதுமக்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் நலன்கருதி கல்வியை ஊக்குவிக்கும் வகையில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியை தொடங்கியது. 1&ம் வகுப்பில் இருந்து 5&ம் வகுப்பு வரை மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
ஒரே ஒரு பள்ளி கட்டிடத்துடன் செயல்பட்டு வந்த பள்ளி கட்டிடத்திற்கு மேலும் புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்ட வேண்டும் என்றும், குறிப்பாக தொடக்கப்பள்ளியை நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். கோரிக்கையின்படி அரசு, நடுநிலை பள்ளியாக தரம் உயர்த்தி அறிவித்தது.
தொடக்கப்பள்ளியாக பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த பள்ளி கட்டிடம் மிகவும் பழுதடைந்து காணப்பட்டதால். அதன் எதிரே புதிய கட்டிடம் கட்டப்பட்டு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. முதலில் தொடக்க பள்ளியாக செயல்பட்டு வந்த பள்ளி கட்டிடம் தற்போது 5 ஆண்டுகளுக்கு முன்பில் இருந்தே பழுதடைந்தும், பள்ளி கட்டிடத்தின் ஓடுகள் பெயர்ந்து கீழே விழுந்தும் எந்த நேரத்திலும் இடிந்து கீழே விழுந்து ஆபத்தை ஏற்படுத்த கூடும் என்ற அச்சத்தில் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளனர். எனவே ஆபத்து ஏற்படுவதற்கு முன்பாகவே, பழுதடைந்த கட்டிடத்தை அகற்றிவிட்டு, புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் என ராங்கியன் விடுதி கிராம பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.