உள்ளூர் செய்திகள்
சிவகாசி பட்டாசு ஆலை அதிபரை பிடிக்க தனிப்படைகள் அமைப்பு
வெடி விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் தொடர்பாக பட்டாசு ஆலை அதிபரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நத்தம்பட்டி போலீஸ் சரகத்துக்குட்பட்ட களத்தூர் நாகலாபுரம் கிராமத்தில் செயல்பட்ட பட்டாசு ஆலையில் நேற்று முன்தினம் வெடி விபத்து ஏற்பட்டது-.
இந்த விபத்தில் ஆலையில் உள்ள 7 அறைகள் இடிந்து தரைமட்டமாயின. அங்கு பணி செய்து கொண்டிருந்த குமார், பெரியசாமி, வீரக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். முருகேசன் என்பவர் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் இறந்தார்.
இந்த விபத்தில் காயம் அடைந்த 8 பேர் சிவகாசி, மதுரை அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து தொடர்பாக களத்தூர் கிராம நிர்வாக அலுவலர் செந்தில்மாயன் புகாரின்பேரில் நத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பட்டாசு ஆலை அதிபர் சிவகாசி தாலுகா புதுப்பட்டி மேட்டுப்பட்டியை சேர்ந்த வழிவிடுமுருகன் (வயது 42). தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
அவர் மீது வெடி பொருட் களை அஜாக்கிரதையாக கையாளுதல் (286), மனித உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் செயல்படுவது (337), இறப்பு ஏற்படுத்துதல் 304 ஏ ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் வழிவிடுமுருகனை பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் உத்தர விட்டுள்ளார். அதன்பேரில் அமைக்கப்பட்டுள்ள தனிப்படை போலீசார் வழிவிடுமுருகனை தீவிரமாக தேடி வருகிறார்கள்.