உள்ளூர் செய்திகள்
ஆன்லைன் ரம்மி

கேபிள் டி.வி. ஆபரேட்டர் தற்கொலை - ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் விபரீத முடிவு

Published On 2022-01-02 16:33 IST   |   Update On 2022-01-02 16:33:00 IST
திருவெண்ணெய்நல்லூர் அருகே ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால், கேபிள் டி.வி. ஆபரேட்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அரசூர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா கூவாகம்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ராமானுஜம் மகன் குமரவேலு (வயது 27). கேபிள் டிவி ஆபரேட்டர். இவருக்கு ஆன்லைனில் ரம்மி விளையாடும் பழக்கம் இருந்துள்ளது. இதற்கு குமரவேலு அடிமையாகி இருந்ததால், பணத்தையும் அதிகளவில் இழந்து வந்துள்ளார்.

இருப்பினும் ரம்மி சூது விளையாட்டில் இருந்து மீள முடியாத அவர், உறவினர்கள் பலரிடமும் கடனாக பணம் பெற்று விளையாடி வந்தார். இதன் மூலம் ரூ.4 லட்சம் வரைக்கும் பணத்தை இழந்துவிட்டார்.

இந் த சூழ்நிலையில், கடந்த 30-ந்தேதி நகையை ஒரு கடையில் அடகுவைத்து அதன் மூலமாக ரூ.12 ஆயிரம் பெற்றுள்ளார். அந்த பணத்திலும் ரம்மி விளையாடி அவர், முழுவதையும் இழந்து விட்டார்.

இதன் காரணமாக, மன அழுத்தத்தில் இருந்த குமரவேலு, நேற்று திருவெண்ணெய்நல்லூர் மலட்டாற்று சுடுகாட்டு பகுதியில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் குமரவேலுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News