உள்ளூர் செய்திகள்
திருட்டு

பர்னிச்சர் கடையில் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் பொருட்கள் திருட்டு

Published On 2021-12-31 16:28 IST   |   Update On 2021-12-31 16:28:00 IST
கோபாலபட்டினத்தில் நகை கொள்ளை சம்பவம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் இன்று கிழக்குக் கடற்கரை சாலையில் மீண்டும் கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது.
அறந்தாங்கி:

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த கோட்டைப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் கலந்தர் (வயது 25). இவர் அதே பகுதியில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் வியாபாரத்தை முடித்துக் கொண்டு, கலந்தர் மற்றும் கடை ஊழியர்கள் கடையை பூட்டி விட்டுச் சென்றனர். அப்போது சமயம் பார்த்து காத்திருந்த மர்ம நபர்கள் கடையின் ஜன்னல் பகுதியை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.

அங்கிருந்த டி.வி., மைக்ரோவேவ் ஓவன் உள்ளிட்ட ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான பர்னிச்சர் பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். இந்நிலையில் இன்று காலை கடை ஊழியர்கள் கடையை திறந்து பார்க்கையில் உள்ளே இருந்த பீரோல் உள்ளிட்ட பொருட்கள் உடைக்கப்பட்டு சிதறிக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அதனையடுத்து கடை உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த கடை உரிமையாளர் கலந்தர் கோட்டைப்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோபாலபட்டினத்தில் நகை கொள்ளை சம்பவம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் இன்று கிழக்குக் கடற்கரை சாலையில் மீண்டும் கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது போலீசாருக்கு மிகுந்த சவாலாகவும், பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

Similar News