உள்ளூர் செய்திகள்
பெரியநாயகி அம்மன் கோவிலில் உடைக்கப்பட்ட சாமி சிலைகள்.

குன்னம் அருகே கோவிலில் 8 சாமி சிலைகள் உடைக்கப்பட்டதால் பரபரப்பு

Published On 2021-12-30 15:28 IST   |   Update On 2021-12-30 15:28:00 IST
குன்னம் அருகே கோவிலில் 8 சாமி சிலைகள் உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குன்னம்:

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே மேலமாத்தூர்-வரிசைப்பட்டி சாலையில் சுமார் 1 கி.மீ. தொலைவில் பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. கிராம மக்களால் நிர்வகிக்கப்படும் இந்த கோவிலின் பூசாரியாக செந்தில்(வயது 38) உள்ளார். இங்கு, ஒரு அடி முதல் 2 அடி உயரமுள்ள கற்களால் செதுக்கப்பட்ட சாமி சிலைகள் பல உள்ளன.

இந்நிலையில் நேற்று முன்தினம் கோவில் தர்மகர்த்தா ரமேஷ் கோவிலுக்குச் சென்றார். அப்போது, அங்குள்ள கற்சிலைகள் உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து குன்னம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் சென்று பார்வையிட்டனர். அப்போது 1½ அடி உயரமுள்ள வெள்ளையம்மா, பச்சையம்மன், பொம்மியம்மா சிலைகள், 2 அடி உயரமுள்ள மதுரை வீரன், வீரபத்திரர், பாப்பாத்தி அம்மன் சிலைகள், ஒரு அடி உயரமுள்ள 2 நந்தி சிலைகள் என மொத்தம் 8 கற்சிலைகள் உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து மேலமாத்தூர் கிராம நிர்வாக அலுவலர் ரஜினி கொடுத்த புகாரின்பேரில், குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலைகளை உடைத்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கோவிலில் சாமி சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News