உள்ளூர் செய்திகள்
தற்கொலை

கடலூரில் சிறைக்காவலர் தற்கொலை- போலீசார் விசாரணை

Published On 2021-12-29 15:39 IST   |   Update On 2021-12-29 15:39:00 IST
கடலூரில் சிறைக்காவலர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் பணிச்சுமையால் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே பெரியகாட்டுசாகையை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் செல்வக்குமார் (வயது 32). இவர் கடலூர் மத்திய சிறைச்சாலையில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் காவலராக பணியாற்றி வந்தார். தற்போது அவர் சிறைச்சாலையில் உள்ள உணவகத்தில் பணியாற்றினார்.

மனைவி, ஒரு குழந்தையுடன் சிறைச்சாலை எதிரே உள்ள குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு வேலை முடிந்து வீட்டுக்கு சென்ற அவர், வீட்டின் மின்விசிறியில் தூக்குப்போட்டுக்கொண்டார்.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

பணிச்சுமையா?சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அவர் பணிச்சுமை காரணமாக இறந்தாரா? அல்லது குடும்ப பிரச்சினை காரணமாக இறந்தாரா? என்பது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் மத்திய சிறையில் நேற்று மதியம் வரை சிறைத்துறை டி.ஐ.ஜி. ஆய்வு செய்து விட்டு சென்றார். அதன்பிறகு சிறையில் கைதி ஒருவர் தற்கொலை முயற்சியிலும், சிறைக்காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் நடந்து இருப்பது சிறைத்துறை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News