உள்ளூர் செய்திகள்
கொலை செய்யப்பட்ட ராமதாஸ்

நிலத்தகராறில் பயங்கரம்- டிராக்டர் ஏற்றி விவசாயி கொலை

Published On 2021-12-28 07:42 GMT   |   Update On 2021-12-28 07:42 GMT
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே நிலத்தகராறில் டிராக்டர் ஏற்றி விவசாயி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேத்தியாத்தோப்பு:

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சேத்தியாத்தோப்பு போலீஸ் சரகம் சக்திவளாகம் கிராமத்தை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 45). விவசாயி.

இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவருக்கும் இடையே நிலத்தகராறு உள்ளது. இது தொடர்பாக 2 பேரின் குடும்பத்தினரும் அடிக்கடி மோதிக்கொண்டனர். இதனால் முன்விரோதம் உள்ளது. நேற்று மாலை ராமதாஸ் அந்த பகுதியில் உள்ள காளியம்மன்கோவில் அருகே தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஸ்ரீதர், பரமசிவம், அதே பகுதியை சேர்ந்த மகாராஜன் ஆகியோர் அங்கு வந்தனர்.

அப்போது நிலத்தகராறு குறித்து மீண்டும் பிரச்சினை எழுந்தது. உடனே அங்குள்ளவர்கள் சமரசம் செய்து அனுப்பிவைத்தனர். ஆனாலும் அதே இடத்தில் ராமதாஸ் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.

இதனை அறிந்த ஸ்ரீதர் தனது டிராக்டரை அங்கு ஓட்டிவந்தார். பின்னர் ராமதாஸ் மீது டிராக்டரை மோத செய்தார். இதில் சம்பவ இடத்திலேயே ராமதாஸ் துடிதுடித்து இறந்தார்.

இந்த தகவல் அந்த பகுதியில் காட்டுதீ போல பரவியது. இதுகுறித்து ஒரத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இறந்துபோன ராமதாஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து போலீசார் ஸ்ரீதர், அவரது தந்தை பரமசிவம் மற்றும் மகாராஜன் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News