உள்ளூர் செய்திகள்
வரி வசூல் பணியில் உள்ளாட்சி நிர்வாகங்கள் தீவிரம்
தேர்தல் அறிவிப்புக்கு முன் வரி வசூலை முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவிநாசி:
பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் ஆண்டுதோறும் மார்ச் மாதத்துக்குள் பொதுமக்கள், வணிக நிறுவனத்தினரிடம் இருந்து தொழில் வரி, வீட்டு வரி, குடிநீர் கட்டணம், உரிம கட்டணம் மற்றும் ஏல குத்தகை இனம் சார்ந்த கட்டணம் ஆகியவை வசூலிக்கப்படுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக தொழில்கள் முடங்கின.
மக்களின் வருமானம் பாதித்தது. வரி வசூலிப்பில் கண்டிப்பு காட்டப்படவில்லை. ஆனால் இம்முறை 100 சதவீதம் வரி விதிப்பை உறுதி செய்ய உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு முன் வரி வசூலை முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனால் உள்ளாட்சி நிர்வாகத்தினரால் வரி வசூல் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட உள்ளாட்சி நிர்வாகத்தினர் கூறுகையில்,
தேர்தல் அறிவிக்கப்பட்டால் வரி வசூலில் ஈடுபட முடியாது. தேர்தல் முடிந்து உள்ளாட்சி நிர்வாகத்தினர் பொறுப்பேற்று விட்டால் வரி வசூல் விவகாரத்தில் அவர்கள் தலையிடுவதற்கான வாய்ப்பு இருப்பதால் 100 சதவீத வரி வசூல் என்பது கடினமான காரியமாகவே இருக்கும். எனவே தேர்தல் அறிவிப்புக்கு முன் வரி வசூலை முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனால் வாகனம் வாயிலாக வீதி, வீதியாக பிரசாரம் செய்து வரி வசூல் பணியை வேகப்படுத்தி வருகிறோம் என்றனர்.