உள்ளூர் செய்திகள்
தற்கொலை

பள்ளிபாளையம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-12-28 06:08 GMT   |   Update On 2021-12-28 06:08 GMT
பள்ளிபாளையம் அருகே மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் வேதனை அடைந்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
பள்ளிபாளையம்:

தேனி மாவட்டம் பெருமாள் கோவில்பட்டியை சேர்ந்தவர் லோகேஷ் (வயது 29). இவர் பள்ளிபாளையம் அருகே காடச்சநல்லூரில் உள்ள ஒரு நூல் மில்லில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். லோகேஷ் நாகப்பட்டினத்தை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இதையொட்டி கணவன், மனைவி இருவரும் காடச்சநல்லூரில் வீடு எடுத்து வசித்து வந்தனர். இந்த நிலையில் அவர்களுக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் லோகேஷிடம் கோபித்து கொண்டு மனைவி நாகப்பட்டினத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டதாக தெரிகிறது.

இதையடுத்து செல்போன் மூலம் மனைவியிடம் பேசிய லோகேஷ் தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். ஆனால் மனைவியோ வர மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த லோகேஷ் நேற்று முன்தினம் காடச்சநல்லூரில் உள்ள வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நேற்று காலை இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீசார் அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News