உள்ளூர் செய்திகள்
நகைக்கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் - துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை
கள்ளக்குறிச்சி பகுதி நகைக்கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என கடை உரிமையாளர்களுக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜலட்சுமி அறிவுரை வழங்கினார்.
கள்ளக்குறிச்சி:
நகை மற்றும் நகை அடகுகடை உரிமையாளர்களுக்கு நகைகளை பாதுகாப்பது குறித்து காவல்துறை சார்பில் ஆலோசனை கூட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள திருமணமண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கள்ளக்குறிச்சி துணை சூப்பிரண்டு ராஜலட்சுமி தலைமை தாங்கி பேசியதாவது:-
நகைக்கடை மற்றும் அடகு கடை உரிமையாளர்கள் கடையின் உள் மற்றும் வெளிப்புறத்தில் கண்காணிப்பு கேமரா கட்டாயம் பொருத்தி கண்காணிக்க வேண்டும். கடைக்கு சந்தேகப்படும்படியான நபர்கள் வந்தால் போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். நகைகள் வைக்கும் பெட்டக வசதி பாதுகாப்பாக இருக்க வேண்டும். இரவு நேரங்களில் காவலுக்கு வாட்ச்மேன் வைத்து பாதுகாப்பது நல்லது.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் நகைக்கடை வியாபாரிகள் சங்கத் தலைவர் கண்ணன், செயலாளர் சுபாகரன், நகை மற்றும் அடகு கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.