உள்ளூர் செய்திகள்
மூங்கில்துறைப்பட்டு அருகே விவசாயி வீட்டில் ரூ.5 லட்சம் நகை கொள்ளை
மூங்கில்துறைப்பட்டு அருகே விவசாயி வீட்டில் ரூ.5 லட்சம் நகைளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மூங்கில்துறைப்பட்டு:
கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அருகே புத்திராம்பட்டு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மதிவாணன் மனைவி சொர்ணம் (வயது 50) விவசாயி. இவரது கணவரும், மகனும் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் சொர்ணம் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று தனது வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்ததோடு, வீட்டின் ஒரு அறையில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிகள் உள்ளிட்ட பொருட்கள் சிதறிக்கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 15 பவுன் நகைகள் மற்றும் 2 வெள்ளி கொலுசுகள் ஆகியவற்றை காணவில்லை. அதனை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றதை அறிந்து சொர்ணம் அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்த தகவலின் பேரில் வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குர்ஷித்பாஷா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் சொர்ணம் வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் அவரது வீட்டுக்குள் புகுந்து ரூ.5½ லட்சம் மதிப்புள்ள நகையை கொள்ளளையடித்து சென்றது தெரிந்தது. தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த வீட்டில் இருந்த தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.