உள்ளூர் செய்திகள்
கைது

உறவினர்கள் தாக்கியதில் பெண் மரணம்: தலைமறைவாக இருந்த 3 பேர் கைது

Published On 2021-12-21 08:42 GMT   |   Update On 2021-12-21 08:42 GMT
உறவினர்கள் தாக்கியதில் பெண் மரணம் அடைந்த வழக்கில் தலைமறைவாக இருந்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம்:

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த நாகவேடு பகுதியை சேர்ந்தவர் புஷ்பா. இவரது மகன் ரமேஷ். இவருடைய மனைவி ரேவதி. கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமாக ரமேஷின் தாய் புஷ்பா, மருமகள் ரேவதியிடம் கேட்டுள்ளார். இதில் மாமியார், மருமகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனை அடுத்து திருவள்ளூர் மாவட்டம் கூவம் பகுதியில் உள்ள ரேவதியின் தந்தை நீலமேகம், அண்ணன் சதீஷ்குமார், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தக்கோலத்தில் துக்க நிகழ்ச்சிக்கு வந்துள்ளனர். அப்போது ரேவதியை பார்க்க சென்றபோது ரேவதிக்கும், புஷ்பாவுக்கும் இடையே தகராறு இருந்தது தெரியவந்தது. இதனால் கோபமடைந்து புஷ்பாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த புஷ்பா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் சதீஷ்குமார், பாலாஜி, தட்சிணாமூர்த்தி ஆகியோரை கைது செய்து விசாரித்து வந்தனர். இந்தநிலையில் தலைமறைவாக இருந்த சோளிங்கர் தாலுகா ஜானகாபுரத்தை சார்ந்த சோமு, நீலமேகம் மற்றும் ரேவதி ஆகியோரை நேற்று அரக்கோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சேதுபதி கைது செய்தார்.
Tags:    

Similar News