உள்ளூர் செய்திகள்
கடலில் மூழ்கி சிறுவன் பலி

வேளாங்கண்ணியில் கடலில் மூழ்கி சிறுவன் பலி - சுற்றுலா வந்தபோது பரிதாபம்

Published On 2021-12-18 11:15 GMT   |   Update On 2021-12-18 11:15 GMT
வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த பெங்களூருவை சேர்ந்த சிறுவன் கடலில் மூழ்கி உயிரிழந்தான். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேளாங்கண்ணி:

கர்நாடக மாநிலம் பெங்களூரு ஹரமாவு ராமமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்த தயாளன் மகன் கெல்வின்(வயது 12). இவன் அங்கு உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். இவன் தனது தாய் ஞானமணி மற்றும் உறவினர்களுடன் நேற்று முன்தினம் நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்தான்.

பின்னர் வேளாங்கண்ணி வெள்ளையாற்றின் முகத்துவாரத்தில் கெல்வின் குளித்தபோது ஆற்றில் தண்ணீரின் வேகத்தில் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டு மூழ்கினான். இதை பார்த்த உறவினர்கள் சத்தம் போட்டனர். உடனே அருகில் இருந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் கடலில் இறங்கி தேடினர். ஆனாலும் அவன் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் பிரதாபராமபுரம் கடற்கரையில் கெல்வின் உடல் கரை ஒதுங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த கீழையூர் கடலோர காவல் படை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கெல்வின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News