உள்ளூர் செய்திகள்
கள்ளக்குறிச்சி அரசு கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கவுரவ விரிவுரையாளர்கள்

கள்ளக்குறிச்சி, திருவெண்ணெய்நல்லூர் அரசு கல்லூரியில் விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

Published On 2021-12-18 11:11 GMT   |   Update On 2021-12-18 11:11 GMT
கள்ளக்குறிச்சி, திருவெண்ணெய்நல்லூர் அரசு கல்லூரியில் விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சின்னசேலம்:

கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தற்போது கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் இயங்கி வருகிறது. இங்கு சுமார் 1,500 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள் நேற்று கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 2019-ம் ஆண்டு நவம்பர் மாத சம்பளம், 2020-ம் ஆண்டு ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான கொரோனா கால ஊதியம், நிலுவை ஊதியம் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

இதில் அனைத்துதுறை கவுரவ விரிவுரையாளர்களும் கலந்துகொண்டனர். பல்கலைக்கழக நிர்வாகமும், தமிழக அரசும், உயர்கல்வித் துறையும் எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தரும் வரை உள்ளிருப்பு போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபடுவோம் என அவர்கள் தெரிவித்தனர். இந்த போராட்டத்தால் மாணவ-மாணவிகள் பாதிக்கப்பட்டனர்.

இதேபோல் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள் கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு நிலவியது.
Tags:    

Similar News