சிதம்பரம் நடராஜர் கோவில் தேர்த்திருவிழாவுக்கு அனுமதிக்காவிட்டால் போராட்டம் - எச். ராஜா
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு இன்று பா.ஜ. க. தேசிய செயலாளர் ராஜா சாமி தரிசனம் செய்ய வந்தார். அவர் நடராஜர் கோவிலில் சாமி தரிசனத்தை முடித்து விட்டு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக பிரசித்தி பெற்ற நடராஜர் கோவில் உள்ளது.இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆனித் திருமஞ்சன விழா, ஆருத்ரா தரிசன விழா ஆகிய திருவிழாக்கள் விமர்சையாக நடைபெறும்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் இந்த ஆண்டு ஆருத்ரா தரிசன விழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நாளை 19-ந் தேதி ,20ந் தேதியன்று தேர் திருவிழா நடைபெற இருந்தது. தமிழக கோவில்களில் நடைபெறும் தேர் திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது கண்டிக்கத்தக்கது.
சிதம்பரம் கோவிலில் தேர் ஓட வில்லை என்றால் அது அரசருக்கு தான் ஆபத்து. தற்போது அரசர் யார் என்று உங்களுக்கு தெரியும்.
கோவில் நகைகளை உருக்குவதற்கு தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை உடனடியாக நிறுத்த வேண்டும் அமைச்சர் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் மற்றும் வருவாய் துறையினர் கோவில் நிலங்களை கையகப்படுத்தி வருகின்றனர். அவர்கள் ஏன் தேவாலயங்கள் மற்றும் மசூதி ஆக்கிரமிப்பு நிலங்களை கையகப்படுத்தவில்லை.
சேலத்திற்கு முதல்அமைச்சர் சென்ற போது பொதுமக்கள் அதிக அளவில் கூடினர். கொரோனோ கட்டுப்பாடுகள் இருக்கும் போது முதல் அமைச்சர் விழாவில் பொதுமக்கள் கூடலாம். ஆனால் கோவில் விழாக்களில் தரிசனம் செய்ய பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது. இது என்ன நியாயம்.
சிதம்பரம் நடராஜர் கோவில் தேர் திருவிழாவிற்கு அனுமதி வழங்க வேண்டும். அவ்வாறு அனுமதி வழங்கவில்லை என்றால் பக்தர்கள், இந்து அமைப்பினரை ஒன்று திரட்டி கோவிலின் முக்கிய வீதிகளில் முன்பு திரண்டு சிதம்பரம் நகரை ஸ்தம்பிக்க வைப்போம் இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்...பெண்ணின் திருமண வயது உயர்வு - முஸ்லிம் லீக், சமாஜ்வாடி எதிர்ப்பு