உள்ளூர் செய்திகள்
விபத்து

கடலூர் முதுநகர் அருகே கார் மோதி 2 வாலிபர்கள் பலி

Published On 2021-12-16 12:47 IST   |   Update On 2021-12-16 12:47:00 IST
கடலூர் முதுநகர் அருகே கார் மோதி 2 வாலிபர்கள் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் முதுநகர்:

கடலூர் முதுநகர் அருகே உள்ள சங்கொலிக்குப்பம் இருளர் நகரை சேர்ந்தவர் ரவி மகன் சதீஷ் (வயது 25). அதே பகுதியை சேர்ந்தவர்கள் ராஜாராம் மகன் ராமமூர்த்தி (24), ராஜேந்திரன் மகன் குமார் (25). இவர்கள் 3 பேரும் கடலூர் முதுநகர் அருகே உள்ள தனியார் கம்பெனியில் மூட்டை தூக்கும் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர்.

நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்ததும் 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை சதீஷ் ஓட்டினார். சங்கொலிக்குப்பம் அருகில் சென்ற போது, எதிரே வேகமாக வந்த கார் ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு தலையில் படுகாயமடைந்த சதீஷ், ராமமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதற்கிடையே விபத்து பற்றி தகவல் அறிந்த கடலூர் முதுநகர் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பலியான 2 பேரின் உடல்களை பார்வையிட்டு, அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

பின்னர் அவர்களது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார் மோதி 2 வாலிபர்கள் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Similar News