உள்ளூர் செய்திகள்
முல்லைப்பெரியாறு அணை

142 அடியில் நீடிக்கும் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்

Published On 2021-12-15 11:17 GMT   |   Update On 2021-12-15 11:17 GMT
முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியில் நீடித்து வருகிறது.
கூடலூர்:

முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி வரை நீர்தேக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும் பேபி அணையை பலப்படுத்தி 152 வரை நீர் தேக்க தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால் கேரளாவில் சிலர் முல்லைப்பெரியாறு அணை பலம் இழந்து விட்டதாகவும் புதிய அணை கட்ட வேண்டும் எனவும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ஆனால் தொழில்நுட்ப வல்லுனர் குழு முல்லைப்பெரியாறு அணை உறுதியாக உள்ளது, பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என வலியுறுத்தி வருகின்றனர். இருந்தபோதும் கேரளாவில் சிலர் தொடர்ந்து வதந்தி பரப்பி வருவதால் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக அணையின் நீர்மட்டம் 140 அடியை கடந்து நிலை நிறுத்தப்பட்டு வருகிறது.

கசிவு நீர் வெளியேறுவதும் சரியான அளவில் உள்ளது. தமிழக பொதுப்பணித்துறை பொறியாளர்கள் அணையை கண்காணித்து வருகின்றனர். அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் கேரளாவுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

சிலர் தேவையில்லாமல் பரப்பி வரும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். மழை குறைந்ததால் அணைக்கு 1230 கன அடி நீர் மட்டுமே வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 700 கன அடியும், கேரளாவுக்கு 144 கன அடியும் திறக்கப்படுகிறது.

வைகை அணையிலும் ஒரு மாதத்திற்கு மேலாக 70 அடியை தாண்டி தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 70.71 அடியாக உள்ளது. 1727 கன அடி நீர் வருகிறது. 2730 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி. நீர்வரத்து 140 கனஅடி. திறப்பு 100 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.41 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் 69 கன அடி.

வீரபாண்டி 3.2, வைகை அணை 0.8, கொடைக்கானல் 3.4 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
Tags:    

Similar News