உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

திருமங்கலம் அருகே மின்வேலியில் சிக்கி விவசாயி மரணம்

Published On 2021-12-15 11:47 IST   |   Update On 2021-12-15 11:47:00 IST
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மின்வேலியில் சிக்கி விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவியும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருமங்கலம்:

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள டி.வலையங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 35), விவசாயி. இவரது மனைவி அக்கம்மாள் (32). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

கிருஷ்ணனுக்கு அந்தப்பகுதியிலேயே வயல் காடு உள்ளது. இதில் பருத்தி பயிரிட்டுள்ளார். வழக்கமாக காலையில் அவர் பருத்தி காட்டுக்கு செல்வது வழக்கம்.

கிருஷ்ணன் தோட்டத்து அருகே கதிர்வேல் என்பவரது வயல் உள்ளது. இங்கு நெல் பயிரிட்டு உள்ளனர். காட்டுப்பன்றி அட்டகாசம் செய்வதால் அந்த வயலுக்கு இரவு நேரங்களில் மின்சார வேலி அமைத்துள்ளார். காலையில் வேலிக்கு செல்லும் மின் இணைப்பை துண்டித்து விடுவது வழக்கம்.

இன்று காலை பருத்திக் காடு சென்ற கிருஷ்ணன், பக்கத்து வயலின் வேலியில் எதிர்பாராத விதமாக கை வைத்துள்ளார். மின் இணைப்பு துண்டிக்கப்படாததால் அவரை மின்சாரம் தாக்கியது. இதில் அலறிய கிருஷ்ணனை, அவருடைய மனைவி அக்கம்மாள் காப்பாற்ற முயன்றார். அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதனால் கணவன்-மனைவி இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த அக்கம்மாளை திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News