உள்ளூர் செய்திகள்
உயிரிழப்பு

பச்சிளம் குழந்தையின் தாய் திடீர் உயிரிழப்பு- கோட்டாட்சியர் விசாரணை

Published On 2021-12-14 16:05 IST   |   Update On 2021-12-14 16:05:00 IST
வேப்பந்தட்டை அருகே பச்சிளம் குழந்தையின் தாய் திடீரென இறந்தார். இது குறித்து கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள தொண்டமாந்துறையை சேர்ந்தவர் சரஸ்வதி. இவரது மகள் கவுசல்யா(வயது 22). இவருக்கும் கொட்டாரக்குன்று கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன்(27) என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்தது. இதையடுத்து கர்ப்பமாக இருந்த கவுசல்யாவிற்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் கவுசல்யாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவரை பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே கவுசல்யா இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கவுசல்யாவின் இறப்பிற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி 11 மாதங்களே ஆவதால் பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி மேல் விசாரணை நடத்தி வருகிறார் பச்சிளம் குழந்தையின் தாய் இறந்த சம்பவம் தொண்டமாந்துறை மற்றும் கொட்டாரக்குன்று கிராமங்களில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News