உள்ளூர் செய்திகள்
தீப்பிடித்து எரிந்த கார்.

கூடுவாஞ்சேரி அருகே நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்தது- 4 பேர் உயிர் தப்பினர்

Published On 2021-12-14 13:56 IST   |   Update On 2021-12-14 13:56:00 IST
கூடுவாஞ்சேரி போலீஸ்நிலையம் அருகே திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
கூடுவாஞ்சேரி:

சென்னை, நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் இசக்கி. இவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் சொந்த ஊரான திருநெல்வேலிக்கு காரில் சென்றிருந்தார்.

நேற்று மாலை அவர்கள் மீண்டும் சென்னை நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தனர். காரில் பெண்கள் உள்பட 4 பேர் இருந்ததாக தெரிகிறது.

இன்று காலை 7.45 மணியளவில் கூடுவாஞ்சேரி போலீஸ்நிலையம் அருகே திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது.

அப்போது திடீரென காரில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனால் அதிர்ச்சி அடைந்த காரில் இருந்த இசக்கி உள்பட 4 பேரும் உடனடியே கீழே இறங்கினர். சிறிது நேரத்தில் கார் முழுவதும் மளமளவென தீப்பற்றி எரிந்தது.

தகவல் அறிந்ததும் கூடுவாஞ்சேரி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. காரில் தீப்பற்றியவுடன் அதில் இருந்தவர்கள் உடனடியாக இறங்கியதால் உயிர் தப்பினர்.

இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News