உள்ளூர் செய்திகள்
கொள்ளை

கடலூர் பஸ் நிலையத்தில் பெண்ணிடம் 10 பவுன் நகை பறிப்பு

Published On 2021-12-12 16:35 IST   |   Update On 2021-12-12 16:35:00 IST
கடலூர் பஸ் நிலையத்தில் பெண்ணிடம் 10 பவுன் நகையை மர்மநபர் பறித்து சென்று விட்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடலூர்:

பண்ருட்டி அருகே உள்ள பத்திரக்கோட்டையை சேர்ந்தவர் ராமமூர்த்தி மனைவி கலைச்செல்வி (வயது 60). இவர் சம்பவத்தன்று கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையத்தில் இருந்து சிலம்பிநாதன்பேட்டைக்கு செல்லக்கூடிய பஸ்சில் ஏறினார். அப்போது பஸ்சில் இருந்த கூட்டநெரிசலை பயன்படுத்தி மர்மநபர் யாரோ, கலைச்செல்வி கழுத்தில் கிடந்த 10 பவுன் நகையை பறித்து சென்றதாக கூறப்படுகிறது.

இதில் பதறிய அவர், கடலூர் பஸ் நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் இருந்த போலீசாரிடம் தெரிவித்தார். உடனே போலீசார், பஸ்சில் இருந்த நபர்களிடம் விசாரணை நடத்தினர். இருப்பினும் நகையை பறித்து சென்ற நபர் குறித்து தெரியவில்லை. பறிபோன நகையின் மதிப்பு ரூ.3½ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

பின்னர் இதுகுறித்து கலைச்செல்வி, திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Similar News