உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

திருப்பூர் மாவட்ட மக்கள் நீதிமன்றத்தில் 2,112 வழக்குகளில் ரூ.48 கோடி மதிப்பில் தீர்வு

Published On 2021-12-12 14:33 IST   |   Update On 2021-12-12 14:33:00 IST
திருப்பூர் ஒருங்கிணைந்த மாவட்ட கோர்ட்டு வளாகத்தில், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சொர்ணம் நடராஜன் மக்கள் நீதிமன்றத்தை தொடங்கி வைத்தார்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.மாவட்டம் முழுவதும் மாவட்ட சட்டப்பணிகள் மற்றும் வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் மொத்தம் 20 அமர்வுகளில் விசாரணை நடைபெற்றது. 

மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் 10 அமர்வுகளும், அவிநாசி, பல்லடம், காங்கயம், தாராபுரம் மற்றும் உடுமலையில் தலா 2 என 10 அமர்வுகளிலும் நடைபெற்றது.

திருப்பூர் ஒருங்கிணைந்த மாவட்ட கோர்ட்டு வளாகத்தில், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சொர்ணம் நடராஜன் மக்கள் நீதிமன்றத்தை தொடங்கி வைத்தார். 

மாவட்ட அளவில் மொத்தம்  4,140 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு அதில் 2,112 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. 

468 மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்குகள் விசாரிக்கப்பட்டு ரூ. 31.27 கோடிக்கு தீர்வு காணப்பட்டது. சொத்து பிரச்சினை தொடர்பாக 311 வழக்குகளில் ரூ.14.47 கோடிக்கு தீர்வு ஏற்படுத்தப்பட்டது. 

செக் மோசடி சார்ந்த 30 வழக்குகளில் ரூ.70.84 லட்சத்திற்கு சமரசம் ஏற்படுத்தப்பட்டது. 7 குடும்ப நல வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. 1,194 சிறு குற்ற வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. 

மொத்தம் ரூ. 15.27 லட்சம்  அபராதமாக வசூலிக்கப்பட்டது. 102 வங்கி வராக்கடன் வழக்குகளில் ரூ. 1.40 கோடிக்கு தீர்வு காணப்பட்டது.

மக்கள் நீதிமன்றத்தில் முன்னாள் மாவட்ட நீதிபதி ராமசாமி, நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி சுகந்தி, 2-வது கூடுதல் மாவட்ட நீதிபதி அனுராதா, தலைமை குற்றவியல் நடுவர் புகழேந்தி, வாகன விபத்து சிறப்பு கோர்ட்டு நீதிபதி நாகராஜன், நீதிபதிகள் பாரதிபிரபா, விக்னேஷ்மது, கார்த்திகேயன், ராமநாதன், உதயசூர்யா பங்கேற்றனர். 

மாவட்டத்தில் மொத்த 2,112 வழக்குகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு ரூ.48கோடிக்கு தீர்வு காணப்பட்டது.  

Similar News