ஊட்டியில் சுற்றுலா விழா நடத்தப்படும்- சுற்றுலாத்துறை அமைச்சர் தகவல்
ஊட்டி:
நீலகிரி பிலிம் கிளப் சார்பில் குறும்பட திருவிழா ஊட்டியில் உள்ள அசெம்பிளி திரையரங்கில் நடைபெற்றது. இதில் 32 நாடுகளை சேர்ந்த 120 குறும்படங்கள் திரையிடப்பட்டன.
சிறந்த படம், நடிப்பு, இயக்குநர் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குறும்படங்கள் தேர்வு செய்யப்பட்டன. இறுதி நாளான நேற்று மாலை ஊட்டி அசெம்பிளி ரூம்ஸ் திரையரங்கில் பரிசளிப்பு விழா நடந்தது.
இதில் சிறப்பு அழைப்பாளராக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் கலந்து கொண்டு சிறந்த குறும்படங்களுக்கு விருது வழங்கினார்.
ஊட்டி சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. சமீபத்தில் குன்னூருக்கு சிறந்த மலைவாசஸ்தலம் என விருது கிடைத்தது. திரைப்படம் சிறந்த பொழுது போக்காக உள்ளது. நல்ல கருத்துக்களை திரைப்படங்கள் மூலம் மக்களிடையே கொண்டு செல்ல முடியும்.
கலைஞர் தனது கதை, வசனம் மூலம் சமூக சமத்துவ சிந்தனைகளை பரப்பி சுயமரியாதை மற்றும் பகுத்தறிவு சிந்தனைகளை திரைப்படங்கள் மூலமாகவே ஊட்டினார்.
சுற்றுலாத்துறை மற்றும் வனத்துறை இணைந்து சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்படும். இதன் மூலம் அரசுக்கு வருவாய் ஈட்டுவதுடன், மக்களுக்கும் புதிய அனுபவத்தை தர வசதிகள் செய்து தரப்படும். ஊட்டியில் சுற்றுலா விழா நடத்தப்பட உள்ளது. சிறந்த குறும்பட இயக்குனர்களை எப்போதும் அரசு ஊக்குவிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேசுகையில், ஊட்டி மலைகளும், இயற்கை அழகும் நிறைந்த பகுதியாக உள்ளது. இதனால் ஆரம்ப காலங்களில் ஊட்டியில் திரைப்படப்பிடிப்பு நடக்காத நாட்களே கிடையாது. இப்படிபட்ட சிறப்பு வாய்ந்த ஊட்டியில் குறும்பட விழா நடத்துவது பாராட்டிற்குரியது. திரைப்படம் சார்ந்த படிப்புகளை பயின்ற இளைஞர்கள் தங்களுக்குள் மறைந்திருக்கும் திறமைகளை வெளி கொண்டு வர இதுபோன்ற குறும்படங்கள் சிறந்த வழி. நீலகிரியை சேர்ந்த பலரும் திரைத்துறையில் பிரகாசித்து வருகின்றனர். இன்னும் பலரும் வர வேண்டும் என்றார்.
இதையும் படியுங்கள்... டெல்லியில் இன்று இந்திய-ரஷிய உச்சி மாநாடு: 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது