உள்ளூர் செய்திகள்
கோத்தகிரியில் உள்ள ஒரு தேயிலை தோட்டத்தை பனிமூட்டம் சூழ்ந்துள்ள காட்சி.

கோத்தகிரியில் கடும் பனிமூட்டம்- பச்சை தேயிலை மகசூல் பாதிக்கும் அபாயம்

Published On 2021-12-05 09:23 IST   |   Update On 2021-12-05 09:23:00 IST
கோத்தகிரியில் கடும் பனிமூட்டம் நிலவுவதால் பச்சை தேயிலை மகசூல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
கோத்தகிரி:

நீலகிரி மாவட்ட மக்களின் பிரதான தொழிலாக தேயிலை விவசாயம் உள்ளது. இங்கு சுமார் 60 ஆயிரம் சிறு விவசாயிகள் தேயிலை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக மழையுடன் கூடிய கடும் பனிமூட்டமான காலநிலை நிலவி வருகிறது. மேலும் போதிய சூரிய வெளிச்சம் இல்லாததால் தேயிலை செடிகளின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்பட்டு கொப்புள நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இளம் தண்டு மற்றும் கொழுந்துகளை இந்த நோய் தாக்குவதால் சுமார் 50 சதவீதம் வரை பச்சை தேயிலை மகசூல் குறையும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். அவர்களுக்கு நஷ்டம் ஏற்படும் சூழல் நிலவுகிறது.

இதற்கிடையில் கொப்புள நோயை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து தேயிலை வாரிய அதிகாரிகள் அறிவுரை வழங்கி உள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது:-

கொப்புள நோயை கட்டுப்படுத்த தேயிலை தோட்டங்களில் அதிக நிழல் தரும் மரங்கள் மற்றும் அதன் கிளைகளை அகற்ற வேண்டும். தேயிலை செடிகள் மீது சூரிய வெளிச்சம் படுமாறு செய்ய வேண்டும். செடிகளில் கொப்புள நோய் பாதிப்பது தெரியவந்தால், பாதிக்கப்பட்ட இலைகள் மற்றும் கொழுந்துகளை கவாத்து மூலம் அகற்றிவிட்டு, எக்சோ கன்சோல் 200 மில்லி மற்றும் காப்பர் ஆக்சிகுளோரைடு 210 கிராம் ஆகியவற்றின் கலவையை 7 நாட்கள் இடைவெளி விட்டு தெளிப்பான் மூலம் தேயிலை செடிகளுக்கு தெளிக்க வேண்டும். இதேபோன்று பிராப்பிகானாசோல் 125 மில்லி மற்றும் காப்பர் ஆக்சிகுளோரைடு 210 கிராம் கலவையை தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். இதன் மூலம் கொப்புள நோயை கட்டுப்படுத்த முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Similar News