உள்ளூர் செய்திகள்
திருட்டு

ஆவூர் அருகே வீடுகளின் பூட்டை உடைத்து 2 பவுன் சங்கிலி-பணம் திருட்டு

Published On 2021-12-04 09:45 GMT   |   Update On 2021-12-04 09:45 GMT
ஆவூர் அருகே வீடுகளின் பூட்டை உடைத்து 2 பவுன் சங்கிலி-பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆவூர்:

விராலிமலை தாலுகா, நீர்பழனி ஊராட்சி காரப்பட்டு காலனியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (வயது 33). இவரது வீடு அப்பகுதியில் தனியாக உள்ளது. நேற்று முன்தினம் வெள்ளைச்சாமி மற்றும் அவரது மனைவி வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்று இருந்தனர். அன்று மாலை வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வெள்ளைச்சாமி வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 2 பவுன் தங்க சங்கிலி திருட்டு போயிருந்தது. இதேபோல, அன்றைய தினம் காரப்பட்டு காலனி அருகே உள்ள சின்ன மூலிப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்லையாவின்(60) வீட்டு பூட்டை உடைத்த மர்ம நபர்கள் பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.25 ஆயிரத்தை திருடிச் சென்று விட்டனர். இதுகுறித்த புகார்களின் அடிப்படையில் மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், மண்டையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் ஆகியோர் திருட்டு சம்பவம் நடந்த 2 வீடுகளுக்கும் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் இதுகுறித்து தனித்தனியே வழக்குப்பதிவு செய்து பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News