உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

6 நாட்களுக்கு பிறகு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்

Published On 2021-12-01 10:44 GMT   |   Update On 2021-12-01 10:44 GMT
கடல் சீற்றம் சற்று குறைந்த நிலையில் மீன்வளத்துறையினரிடம் நேற்று விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி சீட்டு பெற்று நேற்று மாலை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
நாகப்பட்டினம்:

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடல் பரப்பில் 40 முதல் 60 கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடும் என்பதால் மீன்வளத்துறை மூலம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. மறு அறிவிப்பிற்காக காத்திருந்த மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்திருந்தனர்.

இதனால் நாகை மாவட்டத்தில் உள்ள 27 மீனவ கிராமத்தை சேர்ந்த 500 விசைப்படகு மற்றும் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்கள் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடந்த 5 நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருந்தனர்.

கடல் சீற்றம் சற்று குறைந்த நிலையில் மீன்வளத்துறையினரிடம் நேற்று விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி சீட்டு பெற்று நேற்று மாலை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

அவர்களுக்கு தேவையான வலைகளை வெயிலில் காய வைத்து பராமரிப்பு செய்து வரும் மீனவர்கள் டீசல், ஐஸ் கட்டிகள் மற்றும் உணவுப் பொருட்கள் உள்ளிட்டவைகளை படகுகளில் சேகரித்து சென்றனர்.

ஏற்கனவே நவம்பர் மாதத்தில் 12 நாட்கள் கடலுக்கு செல்லாமல் இருந்த நிலையில் மேலும் 5 நாட்கள் வீட்டிலேயே முடங்கி இருந்த மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லும் போது தங்களுக்கு தேவையான மீன்கள் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தனர்.
Tags:    

Similar News