செய்திகள்
மழை

நான்கு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்

Published On 2021-11-29 00:22 GMT   |   Update On 2021-11-29 00:22 GMT
குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை:

குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமானது முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது. தலைநகர் சென்னையில் பெய்த பெருமழையால் மாநகரம் மீண்டும் வெள்ளத்தில் சிக்கியது. குமரி, தூத்துக்குடி, நெல்லை போன்ற தென்மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் நா.புவியரசன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக குமரி, நெல்லை மாவட்டங்களில் இன்று (திங்கட்கிழமை) ஓரிரு இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும். (இந்த 2 மாவட்டங்களுக்கும் ‘ஆரஞ்சு அலர்ட்’ விடுக்கப்பட்டு உள்ளது).

தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. ஏனைய கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் பெரும்பாலான பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பொழிவும் இருக்கும்.

நாளை (செவ்வாய்க்கிழமை) கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழையும், தென் மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும், வடமாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலும் மழை பெய்யக்கூடும்.

1-ந் தேதி (புதன்கிழமை) அன்று தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், வடமாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் இருக்கும். 2-ந் தேதி (வியாழக்கிழமை) அன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசான மழைக்கும் வாய்ப்பு உள்ளது.



இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

குமரி கடல் பகுதிகளில் இன்று சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்றும், அதே போன்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் கேரள கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

Tags:    

Similar News